Select Location
All Locations
State
Region
City / District
PM Kisan: ஜூன் 21-ல் 9.44 கோடி விவசாயிகளுக்கு ரூ.18,800 கோடி நிதி விடுவிப்பு

PM Kisan: ஜூன் 21-ல் 9.44 கோடி விவசாயிகளுக்கு ரூ.18,800 கோடி நிதி விடுவிப்பு

புதுடெல்லி: பிரதமரின் விவசாயிகள் கவுரவ நிதி ஆதரவு திட்டத்தின் 23-வது தவணைத் தொகையான ரூ.18,800 கோடியை 9.44 கோடி விவசாயிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 21-ம் தேதி விடுவிக்க உள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பிரதமர் நரேந்திர மோடி இம்மாதம் 20, 21 தேதிகளில் மேற்கு வங்கம் செல்கிறார். ஜூன் 20 அன்று பிற்பகல் 3:45 மணிக்கு ஹூக்ளி மாவட்டம் தாரகேஷ்வர் நகரில் நடைபெறும் மேற்கு வங்க மாநில உதய தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி, பின்னர், அம்மாநிலத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.

ஜூன் 21 அன்று காலை 6:30 மணிக்கு கொல்கத்தாவில் நடைபெறும் 12-வது சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர், பின்னர் பொதுமக்களிடையே உரையாற்றுகிறார். இதனையடுத்து காலை 9:15 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள ஷியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ள ஐஎன்எஸ் துனாகிரி, ஐஎன்எஸ் ஷன்சோதக், ஐஎன்எஸ் அக்ரே ஆகிய 3 போர்க் கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார்.

பின்னர், ரயில்வே, விவசாயம், ஊரக மேம்பாடு, மீன்வளம், கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வளர்ச்சித் திட்டப்பணிகளுக் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இவை, அம்மாநிலத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதுடன் மக்களின் வாழ்வாதார மேம்பாடு, விவசாயிகளின் நலன் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் உத்வேகம் பெற வழிவகுக்கும்.

இதனையடுத்து பிரதமரின் விவசாயிகள் கவுரவ நிதி ஆதரவுத் திட்டத்தின் கீழ், 23-வது தவணைத் தொகையை பிரதமர் விடுவிக்கிறார். இதன் மூலம் நாடு முழுவதிலும் உள்ள 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக 18,880 கோடி ரூபாய் வரவு வைக்கப்படுகிறது.

கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் இதுவரை நாடு முழுவதும் மொத்தம் 4.46 லட்சம் கோடி ரூபாய் நிதி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : Hindu Tamil

1 hour ago

Home Flash News