மின் துறைக்கு 7,000 பணியாளர்கள் தேவை; 1500 பேருக்கு உடனடி பணி ஆணை!
மின்சாரத் துறைக்கு மொத்தம் 7 ஆயிரம் பணியாளர்கள் தேவை என்றும், 1,500 பேர் உடனடியாக பணியமர்த்தப்படவுள்ளதாகவும் மின்சாரத் துறை அமைச்சர் ஆர். நிர்மல் குமார் இன்று (ஜூன் 8) தெரிவித்தார். மின்துறையில் தாமதமின்றி பதவி உயர்வுகள் வழங்கப்படுவதாகவும், நிலுவையில் உள்ளவர்களும் விரைவில் பதவி உயர்வு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் ஆர். நிர்மல் குமார் செய்தியாளர்களுடன் பேசியதாவது: ''மின்சார துறையில் தாமதமின்றி பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. பணியிட மாற்றங்கள் நேர்மையாக நடைபெறும். மின் துறையில் சமீபத்தில் 300 உதவி செயற்பொறியாளர்கள், செயற்பொறியாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
மின் துறைக்கு மொத்தம் 7,000 பணியாளர்கள் தேவை. இதில், 1,500 பேரை உடனடியாக பணியமர்த்த உள்ளோம். தவெக ஆட்சியில் கொடுக்கப்பட்டுள்ளதைப்போன்ற பதவி உயர்வுகள் கடந்த 45 ஆண்டுகளில் நடந்தது இல்லை. கொஞ்சநாள்கள் விட்டிருந்தால் மின் துறை முழுவதும் தனியார் மயமாகியிருக்கும். அமைச்சராகி ஒரு மாதம் ஆகிவிட்டது; ஒரு ரூபாய் கூட வாங்கியது இல்லை. இது மக்களுக்கான அரசு. மின்துறையில் உள்ள பிரச்னைகள் சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன'' என அமைச்சர் குறிப்பிட்டார்.