மீண்டும் மிரட்டும் ஏவுகணைகள்: ஈரானை விட்டு உடனே வெளியேறுங்கள்; இந்திய தூதரகம் அறிவுறுத்தல்
ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டு தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்க தளங்கள் கொண்ட வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும், ஹார்முஸ் ஜலசந்தியும் மூடப்பட்டுள்ளதால் உலக அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. ஈரான் போரை மொத்தமாக முடிவுக்கு கொண்டு வரும் பேச்சுவார்த்தையில் அமெரிக்காவும் ஈரானும் ஈடுபட்டுள்ளது. முன்னதாக ஈரான் கொடுத்த முன்மொழிவில் அணுசக்தி குறித்து குறிப்பிடப்படவில்லை என்று அமெரிக்கா அதனை நிராகரித்தது.
ஈரான் அணு ஆயுதத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும் என்பது தான் அமெரிக்காவின் முக்கிய வலியுறுத்தலாக உள்ளது. இதையடுத்து, சமீபத்தில் ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் தற்காப்பிற்காக நடத்தப்பட்டதாக டிரம்ப் தெரிவித்திருந்தார். இது ஒருபுறம் இருக்க மற்றொரு புறம் இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
என்.பி.சி நியூஸ் ஊடகத்திற்கு டிரம்ப் அளித்த பேட்டியில், "ஈரானுடனான மோதல் முடிவற்ற போர் அல்ல. கடந்த மூன்று மாதங்களாக நாம் இதைச் செய்து வருகிறோம். இதில் பெரும்பகுதி ஒரு நல்ல போர்நிறுத்த உடன்பாட்டின் கீழ் தான் நடந்துள்ளது. தற்போது ஒப்பந்தம் முடிவுக்கு வரும் தருவாயில் உள்ளது. ஒப்பந்தம் முடிவுக்கு வரவில்லை என்றால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன்" என்று தெரிவித்திருந்தார்.