உஜ்வாலா திட்டம்: சமையல் எரிவாயு சிலிண்டர் எண்ணிக்கை 4ஆக குறைப்பு!
உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கையை மத்திய அரசு 4 ஆக குறைத்துள்ளது. விறகு அடுப்புக்கு பதிலாக எரிவாயு உருளைகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் பிரதமர் உஜ்வாலா திட்டத்தின் கீழ், 2016ஆம் ஆண்டு இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கப்பட்டது.
வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களுக்காக செயல்படுத்தப்படும் உஜ்வாலா திட்டத்தின்கீழ், வைப்புத் தொகை இல்லாமல் எரிவாயு உருளையும், விலையில்லாமல் எரிவாயு அடுப்பும் வழங்கப்பட்டது. உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு ஆரம்பத்தில் ஆண்டுக்கு 12 மானிய விலையிலான (14.2 கிலோ எடை) சிலிண்டர்கள் வழங்கப்பட்டன. இந்த மானிய ஒதுக்கீடு கடந்த ஆண்டு 9 சிலிண்டர்களாக குறைக்கப்பட்ட நிலையில், தற்போது, 4 சிலிண்டர்களாக மேலும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், எரிவாயு சிலிண்டருக்கான மானியம் 200 ரூபாயிலிருந்து 300 ரூபாயாக அதிகரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் பிரவீன் மால் கனூஜா, மாற்றியமைக்கப்பட்ட இந்த ஒதுக்கீடானது, உஜ்வாலா திட்டப் பயனாளிகளின் சராசரி ஆண்டு நுகர்வுடன் ஒத்துப் போவதாக கூறினார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துவருவதால் அரசுக்குச் சொந்தமான பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் திணறி வருகின்றன. இதன் காரணமாக, கடந்த 3 மாதங்களில் இரண்டாவது முறையாக வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்தி பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் சனிக்கிழமை அறிவித்தன. இதன்படி, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை சென்னையில் ரூ. 928.5-இல் இருந்து ரூ. 957.5-ஆகவும், தில்லியில் ரூ. 913-இல் இருந்து ரூ. 942-ஆகவும் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.